கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு; தவறான சிகிச்சையால் இறந்ததாக உடலை வாங்க மறுத்து தாய் போராட்டம்


கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு; தவறான சிகிச்சையால் இறந்ததாக உடலை வாங்க மறுத்து தாய் போராட்டம்
x

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி மகனின் உடலை வாங்க மறுத்து அவரது தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை

பிளஸ்-2 மாணவர் சாவு

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் மின்னல் கொடி. இவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (வயது 17). இவர், அரும்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஹரிகிருஷ்ணனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.

இதற்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

தாய் போராட்டம்

இதற்கு டாக்டர்களின் கவனக்குறைவு தான் காரணம் என கூறி மகனின் உடலை வாங்க மறுத்து ஹரிகிருஷ்ணனின் தாயார் மின்னல் கொடி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எனது மகனுக்கு, சிறு குடலில் ஓட்டை இருப்பதாக கூறி கடந்த 27-ந்தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அது தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி மீண்டும் 2-வது முறையாக அறுவை சிகிச்சை நடந்தது. இதன் பின்னரும் ஹரி கிருஷ்ணன், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

தவறான சிகிச்சை

இந்தநிலையில் நேற்று முன்தினம் எனது மகன் உயிரிழந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. டாக்டர்களின் தவறான சிகிச்சை மற்றும் கவனக்குறைவினால் தான் எனது மகன் இறந்துவிட்டான். இதற்கு நியாயம் கிடைக்கும் வரை எனது மகனின் உடலை பெறமாட்டேன்.

ஆஸ்பத்திரியில் போதுமான வசதியின்மை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் டாக்டர்களின் அலட்சியத்தால் தான் இது நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது வரை ஹரிகிருஷ்ணனின் உடல் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருந்து வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story