கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் 3 மணி போராடி அணைத்தனர்


கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் 3 மணி போராடி அணைத்தனர்
x

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்.

சென்னை

சென்னை கொடுங்கையூர் பகுதியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேமிக்கப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளாக குப்பைகள் சேமிக்கப்பட்டு வருவதால் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையை தரம் பிரித்து அதிலிருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திடீரென கொடுங்கையூர் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மூட்டமாக மாறியது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரி்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து அறிந்ததும் சென்னை மாநகர மேயர் பிரியா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அவருடன் சென்னை வடக்கு மண்டல துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மண்டல அதிகாரிகள் உடன் வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி குப்ைப கிடங்கில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி அந்த பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தபோது ராக்கெட் பட்டாசு தீப்பொறியுடன் பறந்து வந்து குப்பை கிடங்கில் விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


Next Story