அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு: வேலைக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை -அமைச்சர் அதிரடி


அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு: வேலைக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை -அமைச்சர் அதிரடி
x

மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலைக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திடீரென மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

மேலும், சித்தா பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவத்துக்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

4 டாக்டர்கள் மீது நடவடிக்கை

அப்போது ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 16 டாக்டர்களில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு வராமல் இருந்த மகப்பேறு டாக்டர் மிர்லின், மயக்கவியல் டாக்டர் பிரபாவடிவுக்கரசி, எலும்பு முறிவு டாக்டர் ஹர்ஷாபாலாஜி, காது தொண்டை மூக்கு சிறப்பு டாக்டர் கிருத்திகா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், இதை கண்காணிக்காத செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரவாமணியை பணியிடமாறுதல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.


Next Story