பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து


பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து
x

நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்பட 15 பேர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மேலும் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடைபெற்றுவந்தது. பல்வீர் சிங் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த மாதம் 15-ந்தேதி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை ரத்துசெய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 10 மாதத்திற்கும் மேல் பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story