சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்


சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்
x

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு நாள் விழா

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நாள் விழா நாளை (திங்கட்கிழமை) காலை 11.30 மணியளவில் சிறப்பாக நடைபெற உள்ளது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். தமிழ்நாடு நாள் விழாவில், கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.

முன்னதாக காலை 9 மணியளவில் மாநிலத் திட்டக் குழு, துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில், கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில், சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்பு குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் 'தமிழ்நாடு உருவான வரலாறு', ஆழி செந்தில்நாதன் 'மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும், வாலாசா வல்லவன்' தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்', ம.ராசேந்திரன் 'தாய்நாட்டுக்கு பெயர் சூட்டிய தனயன்', எம்.எல்.ஏ. டாக்டர் நா.எழிலன் 'முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு' ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.

பரிசுகள், விருதுகள்...

விழாவையொட்டி மாநில அளவில் நடந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

விழாவில், தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பேசுகிறார்கள். தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டு எடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு நில அளவைத் துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மணற்சிற்பம்

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக, தமிழ்நாடு நாள் வரலாறு குறித்தும், தமிழ்நாடு நாள் சட்டமன்ற தனித் தீர்மானம் குறித்தும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வழங்கிய கருத்துரைகளை உள்ளடக்கிய புத்தகம் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது. மேலும் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவை சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கால் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் 18-ந் தேதி (நாளை) முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story