தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது - வைகோ


தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது - வைகோ
x

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மூன்று விசைப்படகையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்கு காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னர், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் 22 மீனவர்களுக்கும் வருகின்ற மார்ச் 22-ம் தேதி வரை சிறைக் காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவின் கடல் எல்லைக்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து கைது செய்வதும், சிறைத் தண்டனை அளிப்பதும், தாக்குதல் நடத்துவதும் நாள்தோறும் செய்தியாகி கொண்டிருக்கின்றது.

சென்னை ஐகோர்ட்டில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே, இலங்கை கடற்படையால், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் பிப்ரவரி 5-ல் விசாரணைக்கு வந்தபோது, "மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?" என கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், "இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்" என கோரினார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், சிங்கள கடற்படை அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து இருப்பதும், மத்திய பாஜக அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதும் கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story