திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு அறங்காவலர்களை நியமித்தது தமிழக அரசு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு அறங்காவலர்களை நியமித்தது தமிழக அரசு
x
தினத்தந்தி 27 Aug 2022 6:25 PM GMT (Updated: 27 Aug 2022 7:07 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு அறங்காவலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு அனிதா குமரன் உள்பட 5 பேரை அறங்காவலர்களாக, தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோவிலாகும். இங்கு முருக பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால், இவர் ஜெயந்திநாதர் என அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் செந்தில்நாதர் என மருவியது. முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதி இருப்பது சிறப்பாகும். பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புகழ் மிக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு அனிதா குமரன் உட்பட 5 பேரை அறங்காவலர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட சட்டப்பிரிவு 46 (III)-ன் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அரசுக்கு அளிக்க, 7 உறுப்பினர்களை கொண்ட மாநில குழு ஒன்று அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

அதன்படி மாநில குழு அளித்த பரிந்துரையை அரசு பரிசீலித்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக, தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி, இந்திராநகரைச் சேர்ந்த வி.செந்தில் முருகன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மானாடு தண்டுபத்து, மேற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. யான கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் கீழமுத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ந.ராமதாஸ், சென்னை சாந்தோம், சல்லிவன் தெருவைச் சேர்ந்த இரா. அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த பா.கணேசன் ஆகிய 5 பேரை நியமித்துள்ளது.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அறங்காவலர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும். நியமனம் செய்யப்படும் அறங்காவலர்கள், அறங்காவலர் குழுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நாளிலிருந்து 2 ஆண்டு காலம் பதவி வகிப்பார்கள்.

மேற்கண்டவாறு இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story