தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்


தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
x

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, உடனடியாக தமிழக அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் நடைபெறவிருக்கும், பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் வீரர்களைத் தேர்வு செய்யாமல் இருப்பதால், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க இயலாமல் இருக்கின்றனர் என்ற நாளிதழ் செய்தி கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், தேசிய அளவிலான போட்டிகள் என்பது கனவு. அந்தக் கனவை சீர்குலைத்திருக்கிறது திமுக அரசு. புதுச்சேரியிலிருந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பள்ளிகள் அணி தேர்வாகியிருக்கும் நிலையில், தமிழக அணித் தேர்வு இன்னும் நடைபெறாமல் இருப்பது தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கையாலாகாதத்தனத்தைக் காட்டுகிறது.

பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான வாய்ப்புகளை வழங்காமல், முதல்வர் குடும்பத்துடன் சென்று ஐபிஎல் போட்டிகள் பார்த்தால், பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் பெருகிவிடாது என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

உடனடியாக, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், விளையாட்டு வீரர்களின் கனவுகளோடு விளையாட வேண்டாம் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Next Story