உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு


உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

செங்கல்பட்டு

வாலிபருக்கு வெட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவருக்கும் மண்ணிவாக்கம் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த ஜான் என்பவருக்கும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தினேஷ் மோட்டார் சைக்கிளில் மண்ணிவாக்கம் விரிவு பகுதி முருகன் கோவில் அருகே செல்லும்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தினேசை வழிமறித்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தியும், தலையின் பின்புறம் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த தினேசை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை வெட்டிய ஜான் உள்பட 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில்

ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி விரிவுபகுதி ராஜீ தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52), இவர் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நடந்து செல்லும்போது அங்கு வந்த 2 பேர் திடீரென ராஜேந்திரனை வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ராஜேந்திரனின் மகன் மணிகண்டன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை முன்விரோதம் காரணமாக வெட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு


Next Story