பற்களை பிடுங்கிய விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை - நெல்லை போலீசார் நேரில் ஆஜர்


பற்களை பிடுங்கிய விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை - நெல்லை போலீசார் நேரில் ஆஜர்
x

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹல்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துவரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமான அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் பாய்ந்தது. மேலும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

இந்த வழக்கு பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழு, இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்ததை ஏற்று, இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹல்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் நேரில் ஆஜராகியுள்ளனர்.



Next Story