தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 May 2023 7:00 PM GMT (Updated: 12 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா தீபாராதனை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமணப்பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடந்தது. இதனை தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் ராஜ அலங்கார சேவையும், மகா தீபாராதனை நடைபெற்றது.

சாம்பல் பூசணி விளக்கு

இந்த சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கர்நாடக மாநில பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story