நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.67 லட்சம் உண்டியல் காணிக்கை


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.67 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2023 7:00 PM GMT (Updated: 13 Jun 2023 10:17 AM GMT)

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.67 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.67 லட்சத்து 13 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்டியல் திறப்பு

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் நரசிம்மசாமி கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் நேற்று கோவில் செயல் அலுவலர் இளையராஜா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் மற்றும் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

ரூ.67.13 லட்சம் காணிக்கை

பின்னர் அதில் உள்ள காணிக்கைகள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன. அந்த உண்டியல்களில் ரூ.67 லட்சத்து 13 ஆயிரத்து 618 ரொக்கம், 81 கிராம் தங்கம், 220 கிராம் வெள்ளி இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது அந்த உண்டியல்களில் ரூ.64 லட்சத்து 45 ஆயிரத்து 95 ரொக்கம், 55 கிராம் தங்கம், 470 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story