உளுந்தூர்பேட்டை அருகே பயங்கர விபத்து: 2 பேர் பலி, 20 -க்கும் மேற்பட்டோர் காயம்


உளுந்தூர்பேட்டை அருகே பயங்கர விபத்து: 2 பேர் பலி, 20 -க்கும் மேற்பட்டோர் காயம்
x
தினத்தந்தி 29 Jan 2024 1:22 AM GMT (Updated: 29 Jan 2024 6:19 AM GMT)

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து அஜாக்கிரதையாக மோதியதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

விழுப்புரம்,

உளுந்துர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு: திண்டுக்கல் அருகே உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரியான இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு புறப்பட்டு சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அழகுராசுவின் மனைவி ஜெயா மற்றும் மூத்த மகள் வசந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அழகுராசு மற்றும் அவரது இளைய மகள் வைதேகி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். கார் மீது மோதிய வேகத்தில் சுற்றுலா பேருந்தும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story