"எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி.. விரைவில் களத்தில் சந்திப்போம்" - காயத்ரி ரகுராம் அறிக்கை!


எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி.. விரைவில் களத்தில் சந்திப்போம் - காயத்ரி ரகுராம் அறிக்கை!
x

கட்சியில் இருந்து காயத்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்குவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் திடீரென கட்சி கட்டுப்பாட்டுகளை மீறி தனது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு செய்ததால் ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.

அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும், பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம் " என்று தனது டுவீட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்பதலின்படி காயத்ரி ரகுராம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக, பாஜக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயத்ரி ரகுராமின் ராஜினாமாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்றுக்கொண்டதாகவும், அவரது ஒப்புதலின்படி காயத்ரி ரகுராமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயத்ரி ரகுராமின் எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.

கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன்.

விரைவில் களத்தில் சந்திப்போம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







Next Story