துறையூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. தக்க வைத்தது


துறையூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. தக்க வைத்தது
x

துறையூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவியை தி.மு.க. மீண்டும் தக்க வைத்தது.

திருச்சி

துறையூர் ஊராட்சி

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் ரங்கசாமி. இவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்தநிலையில், ஊரக பகுதியில் காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ராஜேந்திரனும், அ.ம.மு.க. சார்பில் மகேந்திரனும், தே.மு.தி.க. சார்பில் கந்தசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தி.மு.க. வெற்றி

இந்த தேர்தலில் மொத்தம் 3,580 வாக்குகள் பதிவாகி இருந்தன. 5 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அதன்படி ராஜேந்திரன் 2,111 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 1,136 வாக்குகளும், தே.மு.தி.க. வேட்பாளர் கந்தசாமி 260 வாக்குகளும் பெற்றிருந்தனர். 73 வாக்குகள் செல்லாதவையாக பதிவாகி இருந்தன.

இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் அ.ம.மு.க. வேட்பாளரை விட 975 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சாத்தமங்கலம் ஊராட்சி

லால்குடி ஒன்றியம் சாத்தமங்கலம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு மதன் குமார் (27) மற்றும் கவிதா ஆகியோர் போட்டியிட்டனர். சாத்தமங்கலம் ஊராட்சியில் மொத்தமுள்ள 2,390 வாக்காளர்களில் 1,755 பேர் வாக்களித்தனர். இதில் மதன் குமாருக்கு 1,096 வாக்குகளும், கவிதாவிற்கு 629 வாக்குகளும் கிடைத்தன. செல்லாத வாக்குகள் 30 என அறிவிக்கப்பட்டது. இதில் மதன்குமார் 467 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பளுவஞ்சி ஊராட்சி

மருங்காபுரி தாலுகா பளுவஞ்சியில் ஊராட்சி தலைவராக இருந்த சரவணன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பழனிச்சாமி, பெருமாள், மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர். 3 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற தேர்தலில் 1,081 வாக்குகள் பதிவானது. இதையடுத்து பதிவான வாக்குச்சீட்டுகள் கல்லுப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் பெருமாள் 6 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று பழனிச்சாமி என்ற வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததையடுத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் பெருமாள் 504 வாக்குகளும், பழனிச்சாமி 498 வாக்குகளும், மணிகண்டன் 58 வாக்குகளும் பெற்றனர். 21 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. முடிவில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் பெருமாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு

இதுபோல் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் காலியாக இருந்தன. இதில் திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சி 3-வது வார்டு, மணப்பாறை ஒன்றியம் எப்.கீழையூர் ஊராட்சி 5-வது வார்டு, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் நெய்குளம் ஊராட்சி 7-வது வார்டு, தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் பிடாரமங்கலம் ஊராட்சி 3-வது வார்டு, தா.பேட்டை ஒன்றியம் சிட்லறை ஊராட்சி 9-வது வார்டு, துறையூர் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி 4-வது வார்டு ஆகிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். இதனால் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தநல்லூர், புத்தாநத்தம் ஊராட்சி

அந்தநல்லூர் ஒன்றியம் அல்லூர் ஊராட்சி 5-வது வார்டு இடைத்தேர்தலில் கவுரிசங்கர் 130 வாக்குகளும், பாலசுப்பிரமணியம் 63 வாக்குகளும் பெற்றனர். இதில், கவுரி சங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புத்தாநத்தம் ஊராட்சியில் 5-வது வார்டில் மொத்தம் 303 வாக்குகள் பதிவானது. இதில் முபாரக் அலி 219 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பூச்செண்டு 83 வாக்குகளை பெற்றார். செல்லாத வாக்கு 1.

அரியூர் ஊராட்சியில் 1-வது வார்டு இடைத்தேர்தலில் மொத்தம் 213 வாக்குகள் பதிவாகின. மதியழகன் 138 வாக்குகளும், நாராயணன் 68 வாக்குகளும் பெற்றனர். இதில் மதியழகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தீராம்பாளையம் ஊராட்சி

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தீராம்பாளையம் ஊராட்சி 2-வது வார்டில் மொத்தம் 287 வாக்குகள் பதிவாகின. இதில் ஆனந்தி 165 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக அமுதவல்லி 112 வாக்குகளை பெற்றார்.

3-வது வார்டில் மொத்தம் 275 வாக்குகள் பதிவாகின. இதில், ரேவதி 151 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். கண்ணகி 118 வாக்குகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தார்.

5-வது வார்டில் மொத்தம் 244 வாக்குகள் பதிவானது. இதில், பவித்ரா 136 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஜெயசித்ரா 104 வாக்குகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தார்.


Next Story