அக்னிபத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்


அக்னிபத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்
x

அக்னிபத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்கு நாள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பீகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா என நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில், 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் முடிவு, நாட்டிற்கே ஆபத்தாக முடியும்.

குறிப்பாக, ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் பணிச்சூழல் மற்றும் அது தொடர்பான விதிமுறைகளை நீர்ந்து போகச் செய்தால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

அக்னிபாத் திட்டம் காரணமாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் அதிருப்தி, விரக்தி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது போராட்டத்தின் வாயிலாக தெளிவாகத் தெரிகிறது. எனவே, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story