இந்தி எதிர்ப்பு போராட்டம் மீண்டும் நடத்தும் நிலை வரும் - வேல்முருகன்


இந்தி எதிர்ப்பு போராட்டம் மீண்டும் நடத்தும் நிலை வரும் - வேல்முருகன்
x
தினத்தந்தி 13 Oct 2022 9:50 AM GMT (Updated: 13 Oct 2022 9:51 AM GMT)

இந்தி எதிர்ப்பு போராட்டம் மீண்டும் நடத்தும் நிலை வரும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை நடைமுறைப்படுத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில், மீண்டும் இந்தி திணிப்பை கையில் எடுப்பதன் வாயிலாக, அது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பதை மோடி, அமித்ஷாவுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்.

மேலும், மோடி, அமித்ஷா மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால், அது மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு வித்திடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story