கரடி கூண்டில் சிக்கியது


கரடி கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 14 Oct 2023 10:00 PM GMT (Updated: 14 Oct 2023 10:00 PM GMT)

எடக்காட்டில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

நீலகிரி

எடக்காட்டில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

கரடி நடமாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. சமீப நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக உலா வருகின்றன. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக மஞ்சூர் அருகே எடக்காடு பஜாரில் பகுதியில் கரடி நடமாடி வந்தது. அங்கு குடியிருப்புக்குள் நுழைந்து கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியது.

வீட்டிற்குள் இருந்த உணவு பொருட்களை தின்றும், சேதப்படுத்தியும் வந்தது. தொடர்ந்து இரவு நேரங்களில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் குடியிருப்புக்குள் புகுந்து கரடி பொதுமக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே, அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் அறிவுரை படி, கடந்த வாரம் எடக்காடு பஜாரை ஒட்டிய வனப்பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கூண்டில் கரடி சிக்கியது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடியை வாகனத்தில் ஏற்றினர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கரடி விடுவிக்கப்பட்டது. அங்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் கரடியை பார்வையிட்டு பரிசோதனை செய்தார். இதில் கரடி நல்ல உடல்நிலையுடன் இருந்தது உறுதியானதால், கரடி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதனால் எடக்காடு பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.


Next Story