ரேஷன் கடையை சேதப்படுத்திய கரடி


தினத்தந்தி 4 Oct 2023 7:00 PM GMT (Updated: 4 Oct 2023 7:00 PM GMT)

குன்னூர் அருகே ரேஷன் கடையை கரடி சேதப்படுத்தியது.

நீலகிரி


குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரடிகள் உணவைத் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் குன்னூர் அருகேயுள்ள முத்தநாடு எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் கடந்த 4 நாட்களாக கரடி உலா வருகிறது. இந்த கரடி ரேஷன் கடை கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. ேமலும் அங்கன்வாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்ற கரடி உணவுப் பொருட்களை சூறையாடி சென்றது. நாள்தோறும் இரவு நேரங்களில் வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கரடி சேதப்படுத்திய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். கதவுகளில் பாதுகாப்பை ஏற்படுத்த இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், கரடிகளுக்கு பிடித்த உணவுகளான எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பான அறைகளில் வைக்கவும் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். மீண்டும் கரடி வந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story