உறவினர் வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் திடீர் சாவு


உறவினர் வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் திடீர் சாவு
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:46 PM GMT)

திண்டிவனம் அருகே உறவினர் வீட்டில் உணவு சாப்பிட்ட சிறுவன் திடீர் சாவு போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம்

திண்டிவனம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கடைசி குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 43). இவர் கோடை விடுமுறையையொட்டி தனது மகள் மோனிஷா, மகன் நந்தேஷ்குமார்(11) ஆகிய இருவரையும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த அன்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் இளங்கோ வீட்டுக்கு கடந்த 28-ந் தேதி அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை திண்டிவனத்தை அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தினருடன் சென்ற இளங்கோ விழா முடிந்ததும் மதியம் வீடு திரும்பினார். பின்னர் அன்று இரவு வீட்டில் சமைத்த இட்லி, உருளைகிழங்கு குருமா ஆகியவற்றை அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் நந்தேஷ்குமார், சத்தியமூர்த்தியின் மைத்துனர் அய்யப்பன், மாமியார் சொக்கம்மாள் மற்றும் ஸ்ரீமதி, தேவதர்ஷினி, இனியா ஆகியோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் நந்தேஷ்குமார், ஸ்ரீமதி, இனியா உள்ளிட்ட 4 பேரையும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நந்தேஷ்குமார் பரிதாபமாக இறந்தான். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story