ஊஞ்சல் ஆடியபோது கழுத்தில் துணி இறுகி சிறுவன் சாவு
திண்டிவனம் அருகே ஊஞ்சல் ஆடியபோது கழுத்தில் துணி இறுகி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திண்டிவனம்
4-ம் வகுப்பு மாணவன்
திண்டிவனம் அருகே உள்ள இறையானூர் பெரிய தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் அருணேஸ்வர் என்கிற அருண்(வயது 9). இவன் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று வீட்டின் அருகில் உள்ள மரத்தில் அருண் துணியில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் துணி அவனது கழுத்தில் இறுக்கியது. இதில் மூச்சுத்திணறி அருண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.
பரிதாப சாவு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது தாய் சத்யா கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அருணை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.
அருணின் உடலை பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊஞ்சல் ஆடியபோது கழுத்தில் துணி இறுகி சிறுவன் பலியான சம்பவத்தால் இறையானூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.