சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு


சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு
x

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.

சென்னை

மழைநீர் வடிகால் பணி

சென்னை மாநகராட்சியில் வெள்ளத்தடுப்பு நிவாரண நிதியின் கீழ், அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட இந்திரா நகர், முதல் அவென்யூவில் ரூ.29.16 லட்சத்திலும், ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கோவளம் வடிநிலப்பகுதியில் பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட கங்கை தெரு, ராம் நகர் (வடக்கு) மற்றும் ராம் நகர் வடக்கு 4-வது தெருவில் ரூ.31.58 கோடியிலும், ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட நங்கநல்லூர், 48-வது தெருவில் ரூ.7.87 கோடியிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா பிரதான சாலையில் ரூ.24.7 கோடியிலும், ஆர்யகவுடா சாலையில் ரூ.3.52 கோடியிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பல்லவன் சாலையில் ரூ.15.4 கோடியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தலைமைச் செயலாளர் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், பணிகள் அனைத்தையும் காலதாமதமின்றி மேற்கொண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

பூங்கா அழகுபடுத்தும் பணி

இதேபோன்று, அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் முதல் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் வரை பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93 லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், வண்ண ஓவியங்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள், ஆலந்தூர் மண்டலத்தில் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் முதல் தில்லை கங்கா நகர் வரை ரூ.12 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அழகுபடுத்தும் பணிகள், அதே சாலையில் பெருங்குடி மண்டலத்தில் புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் முதல் ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் வரை ரூ.43 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பசுமையாக்கும் பணிகள், நீரூற்று, நடைபாதை உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளையும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், துணை கமிஷனர்கள் எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரகுமான், எம்.பி.அமித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story