முருகப்பெருமானிடம் திருஊடல் நடத்திய தெய்வானை


முருகப்பெருமானிடம் திருஊடல் நடத்திய தெய்வானை
x

பழனியில் வைகாசி விசாக திருவிழா நிறைவையொட்டி, முருகப்பெருமானிடம் தெய்வானை அம்மன் திருஊடல் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்

வைகாசி விசாக திருவிழா

பழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்கக்குதிரை, வெள்ளிமயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 11, 12-ந்தேதிகளில் நடந்து முடிந்தது.

முருகனிடம் கோபித்த தெய்வானை

இந்தநிலையில் வைகாசி விசாக திருவிழா, கொடியிறக்கத்துடன் நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதன்பிறகு, சப்பரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தான் இருக்க வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்த தெய்வானை அம்மன், சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

அதைத்தொடர்ந்து நாரத முனிவர் தூது சென்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடையவே வீரபாகு, தெய்வானை அம்மனிடம் தூது சென்று அவரை சமாதானப்படுத்தினார்.

ஊடல் பாடல்கள்

வீரபாகுவாக ஓதுவார் நாகராஜ் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளி, தெய்வானையும் ஒருவரே என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவிலில் நடை திறந்து தெய்வானை அம்மன் முத்துக்குமாரசுவாமியுடன் சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்பிறகு உட்பிரகாரத்தில் வலம் வந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story