இறந்தவர்களின் உடலை ஏரியில் தூக்கி செல்லும் அவலம்


கழுவந்தோண்டி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை ஏரியில் தூக்கி செல்லும் அவலம் நீடிக்கிறது. எனவே இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

நைனார் ஏரி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் நைனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவை கொண்டது. உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிகால் ஓடை மற்றும் காட்டு பகுதிகள் வழியாக சென்று இந்த ஏரியில் கலக்கிறது. பின்னர் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது.

இந்த ஏரியின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது. இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் ஏரிக்கரை வழியாக தூக்கி சென்று இடுகாட்டில் புதைக்கப்படும். மழைக்காலங்களில் இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் தற்போதும் நீடிக்கிறது. எனவே இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஏரியில் உடலை தூக்கி செல்லும் அவலம்

கழுவந்தோண்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரது மனைவி மின்னல்கொடி (வயது 65) உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இந்தநிலையில் அரியலூரில் பெய்த தொடர் மழையின் காரணமாக நைனார் ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து அவரது உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் மின்னல் கொடியின் உடலை சுமந்து ஏரியை கடந்து இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

எப்போது விடிவு காலம் பிறக்கும்

மாணிக்கம்:- கடந்த 2019-ம் ஆண்டு சிவலிங்கம் மனைவி ருக்குமணி, சாரங்கபாணி மனைவி கோசலம் ஆகியோர் வயது முதிர்வு காரணமாக இறந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ராமலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். அவர்களது உடல்களை மார்பளவு தண்ணீரில் உறவினர்கள் தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். கடந்த 2021-ம் ஆண்டு கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் மகன் கண்ணன் (50), ஜெயராமன் மகன் கண்ணன் (45) ஆகியோரின் உடல்களை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்போதைய மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மார்பளவு மற்றும் இடுப்பளவு தண்ணீரில் மிதந்தவாறு இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்பது தெரியவில்லை.

பாலம் அமைக்க வேண்டும்

வேம்பு:- நைனார் ஏரியின் அருகே தான் நாங்கள் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த ஏரியில் எப்போதும் நீர் வரத்து இருந்து கொண்டேதான் இருக்கும். சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வரும். எனவே இப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும், இடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் நாங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

யார் பொறுப்பு?

அன்பரசி:- நைனார் ஏரி அருகே பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். எங்களின் நிலையை அறிந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி செல்கிறார்கள். இருப்பினும் இதுவரை பாலம் மற்றும் சாலை அமைத்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரியில் இடுப்பளவு மற்றும் கழுத்தளவு தண்ணீரில் இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன்கார்டு ஒப்படைப்பு

குமார்:- கழுவந்தோண்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதேநிலை நீடித்து வருகிறது. தற்போது பெய்த தொடர் மழை காரணமாக நைனார் ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மின்னல்கொடியின் உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் ஏரியை கடந்து அவரது உடலை அடக்கம் செய்தனர். எனவே இப்பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தையும் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story