நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி சாவு


நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி சாவு
x

திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நெல் அரவை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த காளி முக்கியா (வயது 25) தனது குடும்பத்தினருடன் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நெல் அரவை தொழிற்சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காளி முக்கியாவின் சகோதரி நித்திஷ் முக்கியா பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story