விவசாயியை கத்தியால் வெட்டியவர் கைது

உளுந்தூர்பேட்டையில் விவசாயியை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் விஜயராஜ் (வயது 30). விவசாயி. இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்த் மணிகண்டன் (37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயராஜிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் விஜயராஜை சரமாரியாக கத்தியால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த விஜயராஜ் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.