நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொன்றவர் கைது


நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொன்றவர் கைது
x

நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

மங்களமேடு:

வாக்குவாதம்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள நம்பியூர் கிராமத்தில் உள்ள நரியோடையை சேர்ந்த அல்லித்துரையின் மகன் அஜித்(வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வதாக அஜித் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரஜினிக்கும்(45), அஜித்துக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த ரஜினி, அஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை தடுக்க முயன்றனர்.

சுட்டுக்கொலை

அப்போது ஆத்திரம் அடைந்த ரஜினி, தான் உரிமமின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அஜித்தை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அஜித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்காதல் விவகாரம்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினிக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனை அஜித்தின் உறவினரான ஒரு பெண் கண்டித்ததோடு, மற்றவர்களிடம் இது பற்றி தெரிவித்ததாகவும், இதனால் அந்த பெண்ணுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டபோது, அவரை அஜித் தட்டிக்கேட்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று காலை ரஜினியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Next Story