ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவர் கைது


ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவர் கைது
x

அரசுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா பாண்டாரவேடு காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பஞ்சா. இவர்கள் இருவரும் கொல்லால் குப்பம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அதில் தென்னங்கன்றுகளை நட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் தெரிந்ததும் பள்ளிப்பட்டு தாசில்தாரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதட்டூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் (வயது 50) அங்கு சென்று நடப்பட்டு இருந்த தென்னங்கன்றுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பஞ்சா கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.


Next Story