மருமகனை ஆள்வைத்து தாக்கிய மாமியார்... மன உளைச்சலில் மருமகன் எடுத்த விபரீத முடிவு


மருமகனை ஆள்வைத்து தாக்கிய மாமியார்... மன உளைச்சலில் மருமகன் எடுத்த விபரீத முடிவு
x

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுரேஷ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் சுரேஷ்(வயது 43). அதே பகுதியில் தையல் கடை நடத்தி வரும் இவர் அவ்வப்போது ஆட்டோ ஓட்டியும் வந்துள்ளார். ரேகா என்ற மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சுரேசுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு வந்துள்ள நிலையில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவரிடம் கோபித்துக்கொண்ட ரேகா தனது மகன், மகளுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியார் நகரில் உள்ள சுரேஷின் சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த சுரேஷ் நேற்று இரவு தூக்கில் தொங்கினார். நேற்று காலை சுரேஷ் வீ்ட்டுக்கு வந்த அவரது நண்பர் ஒருவர் வீட்டில் சுரேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினருக்கும், சுரேஷின் மனைவிக்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு வந்த உறவினர்கள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிண அறைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக சுரேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 4. 50 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ பதிவில் தனது மாமியார் தன்னை ஆள் வைத்து தாக்கினார். 15 பேர் என்னை தாக்கினர். நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை அவர்கள் தாக்கும்போது எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். நான் 3 நாட்களாக சாப்பிடாமல் உள்ளேன். என் சாவுக்கு காரணம் எனது மாமியார் மற்றும் சிலர் என ஒரு சில பெயர்களை கூறியுள்ளார்.

இதனால் தனது மாமியார் ஆள்வைத்து தாக்கியதால் மன உளைச்சல் ஏற்பட்டு சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story