மோட்டார் சைக்கிளை தர மறுத்ததால் கொள்ளையர்கள் வெறிச்செயல்- கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு


மோட்டார் சைக்கிளை தர மறுத்ததால் கொள்ளையர்கள் வெறிச்செயல்- கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
x

புழல் அருகே தனியாக நின்ற கல்லூரி மாணவரிடம் மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அவர் தரமறுத்ததால் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் டீச்சர்ஸ் காலனி முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரஷன்ஜோஷ்வா (வயது 20). இவர், மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

புழல் சைக்கிள் ஷாப் அருகே மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் தனது நண்பருக்காக மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வழிப்பறி கொள்ளையர்கள், தனியாக நின்றிருந்த கல்லூரி மாணவர் ரஷன் ஜோஷ்வாவிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்றனர். அதனை அவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ரஷன் ஜோஷ்வாவின் தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ரஷன் ஜோஷ்வாவை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சென்னை கொடுங்கையூர் சுகந்தம்மாள் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜய் (20). இவர், நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோவில் முதல் சந்து பகுதியில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் விஜயை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முதுகு, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஜய் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

அவருடைய நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விஜய், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக கொடுங்கையூர் ஆர்.வி.நகர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் விஜயை வெட்டியது தெரிந்தது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story