"மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது" ஆசிரியர்கள் வேதனை


மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது ஆசிரியர்கள் வேதனை
x

பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 77 வகையாக நெறிமுறைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசரியர்கள் சங்க செய்தித் தொடர்பு செயலாளர் சேகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஆசிரியர்களுக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும். ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது.

இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் இதைவிட மோசமான நிலைக்கு போவார்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், எல்லா ஆசிரியர்களும் பயமில்லாமல் வேலை செய்வார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயப்படுவார்கள், சரியாக படிப்பார்கள்.

இன்றைய நிலைமை எப்படி இருக்கிறதென்றால், ஆசிரியர்கள்தான் மாணவர்களை பார்த்து பயப்படுகிறார்கள். எந்த மாணவன் என்ன செய்வானோ, எந்த மாணவன் அடிப்பானோ, எந்த மாணவன் எதாவது பிரச்சனை ஏற்படுத்துவானோ? என்ற பயத்துடனேயே ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் இப்போது பெரும்பாலும் சொந்த வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story