விவசாயி அருள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது தமிழக அரசு..!


விவசாயி அருள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது தமிழக அரசு..!
x

மேல்மா சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயி அருள் போராட்டம் நடத்தினார்.

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமைந்துள்ள மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

அவர்கள் மீது பதிவான 11 வழக்குகளின் அடிப்படையில், அருள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர், அருளை தவிர்த்து மீதமுள்ள 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்தது. இந்த நிலையில், தனது கணவர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அருள் எந்தவொரு தீவிர குற்றத்திலும் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில், மக்களை தூண்டியதாகவும், நிலம் வழங்க முன்வருபவர்களை தடுத்ததார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில், உள்நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது விவசாயி அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


Next Story