3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்; போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்


3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்; போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்
x
தினத்தந்தி 22 Aug 2023 7:38 AM GMT (Updated: 22 Aug 2023 12:57 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

சென்னை

சென்னை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 6.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், வெடிகுண்டு 8 மணிக்கு வெடிக்கும் எனவும் கூறிவிட்டு உடனே தொடர்பை துண்டித்தார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார், பூக்கடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமையை சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி எனத்தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் சென்னை வியாசர்பாடி மல்லிகை பூ காலனியைச்சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கத்தின் மகன் மணிகண்டன் (வயது 21) என்பது தெரியவந்தது. இவர், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மணிகண்டன் நேற்று காலை வீட்டில் இருந்த செல்போனை எடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

ஏற்கனவே, மணிகண்டன் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 21-ந்தேதி சென்டிரல் ரெயில்நிலையத்திற்கு மிரட்டல் விடுத்திருந்தார். இந்தநிலையில் நேற்று 3-வது முறையாக மீண்டும் மணிகண்டன் சென்டிரல் ரெயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் போலீசார் மணிகண்டனின் பெற்றோரிடம் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கடுமையாக எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் நேற்று சென்டிரல் ரெயில்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story