திருமணத்தில் தந்தை இல்லாத குறை; தத்ரூபமாக சிலை மூலம் கண்முன் கொண்டு வந்த மகள்


திருமணத்தில் தந்தை இல்லாத குறை; தத்ரூபமாக சிலை மூலம் கண்முன் கொண்டு வந்த மகள்
x

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் உருவில் மெழுகு சிலை செய்து அதன் முன் நின்று திருமணம் செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி பத்மாவதி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தந்தை மீது அதீத பாசம் கொண்ட மகேஸ்வரி, தனது திருமணத்தில் தந்தை இல்லாத குறையைப் போக்கும் வகையில், செல்வராஜின் உருவத்தில் மெழுகு சிலையை உருவாக்க முடிவு செய்தார். இதற்கு தாயார் பத்மாவதியும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி ரூ.5 லட்சம் செலவில், அதற்கான வடிவமைப்பாளர்களைக்கொண்டு மெழுகு சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் செல்வராஜ் உருவ அமைப்பில் மெழுகுச்சிலையை உருவாக்கினர். அந்த சிலை முன் நேற்று புரோகிதர்களை கொண்டு திருமண சடங்குகள் நடந்தன.

தந்தை செல்வராஜ் உருவச்சிலை அருகில் தாயார் பத்மாவதி அமர, பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அதன்பின்னர் மகேஸ்வரி, தந்தையின் உருவில் மெழுகு சிலை முன் நின்று திருமணம் செய்து கொண்டார்.

தந்தையின் நினைவு ததும்பலில், மகேஸ்வரி தந்தையின் மெழுகு சிலையை உற்றுபார்க்க அவரது கண்கள் கலங்கியது. உடனே மகேஸ்வரியை திருமண வீட்டார் அனைவரும் சமாதானப்படுத்தினர். இந்த காட்சியை பார்த்த திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story