'மிஸ்டு கால்' மூலம் மலர்ந்த காதல்: திருமணம் நின்றதால் என்ஜினீயர் வீட்டின் முன் பெண் டாக்டர் போராட்டம்


மிஸ்டு கால் மூலம் மலர்ந்த காதல்: திருமணம் நின்றதால் என்ஜினீயர் வீட்டின் முன் பெண் டாக்டர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2022 6:03 PM GMT (Updated: 9 Sep 2022 7:24 AM GMT)

'மிஸ்டு கால்' மூலம் மலர்ந்த காதல் திருமணம் நின்றதால் என்ஜினீயர் வீட்டின் முன் பெண் டாக்டர் போராட்டம் நடத்தினார். இதனால் களியக்காவிளை அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த 27 வயது என்ஜினீயர் ஒருவர், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு 'மிஸ்டு கால்' ஒன்று வந்தது. அதில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம், பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் பேசினார். அதன்பிறகும் அவர்கள் அடிக்கடி பேசி கொண்டனர். அதுவே அவர்கள் இடையே காதலாக மலர்ந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து, தங்களது காதலை வளர்த்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களது பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். ஆனால் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர்.

திருமணம் நின்றது

அதைத்தொடர்ந்து இருவருக்கும் வருகிற 12-ந்தேதி திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதற்காக நிச்சயதார்த்தம் நடத்தி, வரதட்சணையாக நகை, கார் தருவதாக பேசி, மாப்பிள்ளை வீட்டாருக்கு முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. பத்திரிகைகள் அச்சடித்து, திருமண மண்டபமும் முன் பதிவு செய்யப்பட்டது. திருமணத்துக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வந்தது.

இந்தநிலையில் 3 வாரங்களுக்கு முன்பு இரு வீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், மாப்பிள்ளை பிடிவாதமாக பெண் வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது. பெண் வீட்டார் எவ்வளவோ சமரசம் பேசியும், அதை மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை. இதனால் காண்டிராக்டரான மணமகளின் தந்தை களியக்காவிளை போலீசாரின் உதவியுடன், திருமணத்துக்காக கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுக்கொண்டார். இனி இரு வீட்டாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருமணம் நின்றது.

பெண் டாக்டர் போராட்டம்

அதன்பிறகும் காதலனை மறக்க முடியாமல் பெண் டாக்டர் தவித்து வந்தார். இந்த நிலையில் 5 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு திடீரென்று வெளியேறினார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பெண் டாக்டர், வக்கீல் ஒருவருடன் காதலன் வீட்டுக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வரதட்சணை அதிகம் கேட்டு என்னை கைவிட்டு விடாதீர்கள். நான் உங்களை அதிகமாக நேசித்து வருகிறேன். என்னை ஏற்று கொள்ளுங்கள் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பொதுமக்கள் கூடினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண் டாக்டரிடம் பேசினார்கள். அப்போது இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்தை நிறுத்துவது தொடர்பாக எழுதி கொடுத்த உடன்படிக்கை பத்திரத்தை பெண் டாக்டர், அவருடன் வந்த வக்கீல் மற்றும் பொதுமக்களிடம் காட்டினார்கள். மேலும் டாக்டரான உனக்கு ஏராளமான மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள் என்று அவரிடம் போலீசார் கூறினார்கள். அதைத்தொடர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பெண் டாக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story