ஜெ.குருவுக்கு கோவில் கட்ட பணிகள் தொடக்கம்


ஜெ.குருவுக்கு கோவில் கட்ட பணிகள் தொடக்கம்
x

ஜெ.குருவுக்கு கோவில் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மஞ்சள் படை நிறுவன தலைவர் கூறினார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் குரு என்கிற ஜெ.குருநாதன் மகனும், மஞ்சள் படை நிறுவன தலைவருமான கனலரசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காடுவெட்டி கிராமத்தில் உள்ள மாவீரன் நினைவிடத்தில் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து சமூக ஏழை-எளிய மாணவர்கள் கல்வி, வன்னிய சமூகத்தை சேர்ந்த ஏழை-எளிய குடும்ப பெண்களுக்கு திருமண உதவித்தொகை, மாவட்டத்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து ஊக்க பரிசும் வழங்க உள்ளோம். மாவீரன் பிறந்தநாள் மற்றும் மறைந்த நாளானது வன்னியர் குருபூஜை, வன்னியர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட உள்ளது. சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மேலே கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் மாவீரன் ஜெ.குரு சமூக நல அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலங்களை மக்களுக்கு வழங்க வேண்டும். இதனை வழங்கும் வரை மக்களுக்காக மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம்.

மேலும் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கி அனைத்து சமூக மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் எங்கள் சமூகத்திற்கு ஆதரவாக யார் உள்ளார்களோ அவர்களுக்கு எங்கள் ஆதரவை கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாவீரன் ஜெ.குருவுக்கு அமைக்கப்படும் கோவில் மாதிரி படம் வெளியிடப்பட்டது.


Next Story