ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் - அதிகாரிகள் தகவல்


ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் - அதிகாரிகள் தகவல்
x

ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி தண்ணீர் ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனபன்சத்திரம் கூட்டு சாலை வழியாக பாய்ந்து எண்ணூரில் வங்க கடலில் கலக்கிறது.

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவது வழக்கம். இந்த தரைப்பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தரைப்பாலம் மூழ்கிவிட்டால் வெள்ளம் குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஒரு நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.11 கோடியே 30 லட்சம் ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2019-ம் ஆண்டு தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இடையில் பணிகள் நடைபெறவில்லை. பின்னர் கடந்த மார்ச் மாதத்த்தில் பணிகள் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

180 மீட்டர் நீளத்தில், 9.50 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க உள்ளனர். பாலத்தை 8 மெகா தூண்கள் தாங்கி நிற்கும். வரும் மார்ச் மாதத்துக்குள் பாலப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story