"ரெய்டு மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லை" - அமைச்சர் ரகுபதி விளக்கம்


ரெய்டு மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லை - அமைச்சர் ரகுபதி விளக்கம்
x

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை,

அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் முதல்-அமைச்சர் மற்றும் இந்த அரசுக்கு இல்லை. தகுந்த முகாந்திரம் அடிப்படையின் மூலமே அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

அதிமுகவில் நிலவி வரும் குழப்பத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்த பிறகே சோதனை நடத்துகின்றனர். தகுந்த முகாந்திரம் இல்லாமல் எதையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story