நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை: சீமான் பேட்டி


நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை: சீமான் பேட்டி
x
தினத்தந்தி 2 Sep 2023 10:00 AM GMT (Updated: 2 Sep 2023 10:03 AM GMT)

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று சீமான் தெரிவித்தார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார். இதுகுறித்து நேற்றுமுன்தினம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

மதியம் 1.30 மணியளவில் கோர்ட்டில் ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் மாலை 4.30 வரை வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், விஜயலட்சுமி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு சீமான் கூறியதாவது:- விஜயலட்சுமி என்னுடன் ஒரு படம் நடித்தார். ஆனால் வீர லட்சுமிக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. நான் காதலித்தேன் திருமணம் செய்தேன் என்று விஜயலட்சுமி சொல்கிறார். திருமணம் ஆனால் அந்த புகைப்படத்தை வெளியிட வேண்டியதுதானே. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. நடிகை விஜயலட்சுமி என்னைப் போலவே 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்" என்றார்.


Next Story