திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவு:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து ப.சிதம்பரம், வைகோ ஆறுதல்


திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவு:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து ப.சிதம்பரம், வைகோ ஆறுதல்
x

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து ப.சிதம்பரம், வைகோ ஆகியோர் ஆறுதல் கூறினர்.

ஈரோடு

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து ப.சிதம்பரம், வைகோ ஆகியோர் ஆறுதல் கூறினர்.

நேரில் சந்தித்து ஆறுதல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் கடந்த 4-ந்தேதி இறந்தார். அவரது திடீர் மரணம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது தந்தையும், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன் (சிவகாசி தொகுதி), ஊர்வசி அமிர்தராஜ் (சாத்தான்குளம்), கணேசமூர்த்தி எம்.பி., முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் திருமகன் ஈவெரா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புத்தகங்கள் வாசிப்பவர்

முன்னதாக ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

திருமகன் ஈவெரா அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். என்னை பார்க்கும் போதெல்லாம் புத்தகத்தை அன்பளிப்பாக தருவார். நிறைய புத்தகங்கள் வாசிப்பவர். இந்த இளம் வயதில் அகால மரணம் அடைந்த அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிப்பதற்காகவும் வந்திருக்கின்றேன்.

இது தாங்க முடியாத இழப்பு. மகனை 46 வயதில் இழப்பது என்பது பேரிடி. ஆனால் அருமை நண்பர் இளங்கோவன் இந்த பேரிடையே தாங்கிக்கொண்டு தைரியத்தோடு இருக்க வேண்டும் என்று அவரை கேட்டுக் கொண்டிருக்கின்றேன். திருமகன் ஈவெரா மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை, அனுதாபங்களை அவருடைய குடும்பத்தினருக்கும் தொகுதி மக்களுக்கும் தெரிவித்து கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்போடு பழகக்கூடியவர்

வைகோ கூறும்போது, 'திருமகன் ஈவெரா அனைவராலும் நேசிக்கப்பட்டவர். அவருடைய மரணம் என்பது பேரிடியாக உள்ளது. எல்லோரிடமும் அவர் அன்போடு பழக்கூடியவர். பெரியார் நூலை திரும்ப, திரும்ப படித்தவர். பெரியார் 100 வயதை நெருங்கியவர் ஆனால் 50 வயதைக்கூட நெருங்காத திருமகன் ஈவெரா மரணம் என்பது மிகவும் துக்கமான செய்தி' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவஹர்அலி, மாவட்ட துணைத்தலைவர் பாஷா, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அர்சத் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story