திருவள்ளூர்: பிரேத பரிசோதனைக்கு பின் பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு


திருவள்ளூர்: பிரேத பரிசோதனைக்கு பின் பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு
x

மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரிந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மாணவியின் திடீர் மரணம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர், உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரிந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் உடலை வாங்க மறுத்திருக்கின்ற நிலையில் அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவியின் உடலை தெக்களூர் கிராமத்திற்கு எடுத்து செல்ல அமரர் வாகனம் தயார் நிலையில் உள்ளது. மாணவியின் சொந்த ஊரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story