நாளையுடன் நிறைவு பெறுகிறது திருவண்ணாமலை மகாதீபம்...!


நாளையுடன் நிறைவு பெறுகிறது திருவண்ணாமலை மகாதீபம்...!
x

2,668 அடி உயர மலை மீது காட்சி தந்த திருவண்ணாமலை மகாதீபம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் கடந்த 6-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலையின் உச்சியில் காட்சி அளிக்கும்.

அதன்படி, திருவண்ணாமலையில் 2668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 10-வது நாளாக (இன்றும்) கொழுந்துவிட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 2,668 அடி உயர மலை மலை மீது காட்சி தரும் மகாதீபம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (17ம் தேதி) காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும்.

அதைத்தொடர்ந்து, ஜனவரி 6-ம் தேதி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்கப்படும்.


Next Story