தூத்துக்குடி: சாலையில் நகையை தொலைத்த தலைமை ஆசிரியர் - கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவியின் தாய்


தூத்துக்குடி: சாலையில் நகையை தொலைத்த தலைமை ஆசிரியர் - கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவியின் தாய்
x

முத்துலட்சுமி மற்றும் அவரது மகளை பாராட்டி காவல்துறை சார்பில் 2 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள மெக்கவாய் கிராமிய மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் செல்வராணி, தனது இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூருக்குச் சென்றுள்ளார். அப்போது செல்வராணி 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைப்பையுடன் தான் வைத்திருந்த நகைகளை தவறவிட்டுள்ளார்.

கைப்பை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரம் அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மதீஷா என்ற மாணவியின் தாய் முத்துலட்சுமி, சாலையில் கிடந்த அந்த கைப்பையை எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த போலீசார், விசாரணையில் உறுதிப்படுத்திவிட்டு அந்த கைப்பையை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். மேலும் முத்துலட்சுமி, அவரது மகள் மதீஷா ஆகியோரை பாராட்டி அவர்களுக்கு காவல்துறை சார்பில் 2 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.




Next Story