'முதல்-அமைச்சர் திருவாரூரில் இருந்தாலும் அவருடைய எண்ணங்கள் சென்னையை சுற்றியே உள்ளன' - அமைச்சர் சேகர் பாபு பேட்டி


முதல்-அமைச்சர் திருவாரூரில் இருந்தாலும் அவருடைய எண்ணங்கள் சென்னையை சுற்றியே உள்ளன - அமைச்சர் சேகர் பாபு பேட்டி
x

கலைஞர் கோட்ட திறப்பு விழாவை காணொலில் பார்த்துக் கொள்ளுமாறு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்று அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூக்குச் சென்று கலைஞர் கோட்டத்தை திறப்பு வைத்தார். இந்நிலையில் முதல்-அமைச்சர் திருவாரூர் சென்றாலும், அவரது எண்ணங்கள் சென்னையை சுற்றியே உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எதிர்பாராத மழையின் காரணமாக மழைநீர் செல்வதற்கான வடிகால்களில் குப்பைகள் அடைத்து தண்ணீர் தேங்கியது. நேற்று காலை 11 மணி முதல் சென்னை மாநகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்காக திருவாரூர் சென்றாலும், அவரது எண்ணங்கள் சென்னையை சுற்றியே தான் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களுக்கு எந்த வித இடர்பாடுகளும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அவர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரே நேரடியாக கைப்பேசியில் தொடர்பு கொண்டு கலைஞர் கோட்ட திறப்பு விழாவை காணொலில் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு எந்த வித கஷ்டங்களும் வந்துவிடாத வகையில் நீங்கள் அங்கேயே முகாமிடுங்கள் என்று எங்களிடம் அறிவுறுத்தினார். மழைநீர் கால்வாய் பணிகள் சுமார் 400 கி.மீ. அளவுக்கு நடந்து கொண்டிருக்கின்றன. பருவமழைக் காலத்திற்கு முன்பாக இந்த பணிகள் நிறைவு செய்யப்படும்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.



Next Story