வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலைமிரட்டல்


வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலைமிரட்டல்
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:46 PM GMT)

திண்டிவனம் அருகே வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள கீழ் எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொய்யாதப்பன் மகள் உமா (வயது 26). இவருக்கும் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் ராஜசேகர்(31) என்பவருக்கும் கடந்த 4.5.2023 அன்று கூட்டேரிப்பட்டில் ஒரு தனியார் மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக ராஜசேகர் தனது பெற்றோருடன் சேர்ந்து உமாவின் பெற்றோரிடம் நகைகள், சீர்வரிசை பொருட்கள அதிகமாக கேட்டு பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ஊர் பெரியவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 14.6.2023 அன்று கீழ்மாம்பட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் ராஜசேகருக்கும், உமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த ஒரு வார காலத்திற்கு பிறகு உமாவிடம் வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் ராஜசேகர், பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுமைப்படுத்தியாக தெரிகிறது.

இதையடுத்து மீண்டும் இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பு உறவினர்கள் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராஜசேகரின் தாய் எல்லம்மாள், தந்தை முனுசாமி, தம்பி பாண்டிதுரை மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் உமாவை திட்டி, அவரது கழுத்தில் இருந்த தாலியை அறுத்துஎடுத்துக்கொண்டு மண்எண்ணெயை ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து உமா கொடுத்த புகாரின்பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிந்து, ராஜசேகர், எல்லம்மாள் (46), முனுசாமி (54), பாண்டிதுரை (27) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story