விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரியலூர்

அரியலூர் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 39). இவர் விஷ்வ இந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் ஆவார். முத்துவேல் மீது பாதிரியார் ஒருவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மதக்கலவரத்தை தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டி பணம் பறிப்பது, மக்களை திசை திருப்புவது உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த 14-ந்தேதி கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் முத்துவேல் மீது அரியலூர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் முத்துவேல் சிறையில் இருந்து வெளியே வந்தால் மனுதாரர் மற்றும் சாட்சியங்களுக்கு ஊறு விளைவிக்க நேரிடும். மேலும் தொடர்ச்சியாக மத உணர்வுகளை தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும், பிற மதத்தினரை புண்படுத்தும் நோக்கிலும் செயல்படும் காரணத்தினாலும், பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாலும் முத்துவேலை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ரமணசரஸ்வதி குண்டர் சட்டத்தில் முத்துவேலை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் அரியலூர் கிளை சிறையில் இருந்த முத்துவேலை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை சிறை அதிகாரிகளிடம் அளித்தனர்.


Next Story