தொடர் மழையால் நிரம்பி வழியும் துறையூர் பெரிய ஏரி - ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்


தொடர் மழையால் நிரம்பி வழியும் துறையூர் பெரிய ஏரி - ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்
x

ஆபத்தை உணராத சிறுவர்கள் வழிந்தோடும் வெள்ள நீரில் சைக்கிள் ஓட்டியும், மேலிருந்து கீழே குதித்தும் விளையாடி வருகின்றனர்.

திருச்சி,

துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பச்சைமலை, செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், செல்லிபாளையம், வைரிசெட்டிபாளையம், ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அந்தந்த பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதில் செல்லிபாளையம் ஏரி, கீரம்பூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் கடந்த 2 நாட்களாக நீர் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துறையூர் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கடைக்கால் வழியாக நீர் செல்கிறது. தற்போது மழை பெய்ததால் ஏரியில் இருந்து மீண்டும் அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் ஏரியின் கடைக்கால் பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

மேலும் ஆபத்தை உணராத சிறுவர்கள் பலர் அங்கு வழிந்தோடும் வெள்ள நீரில் சைக்கிள் ஓட்டியும், மேலிருந்து கீழே குதித்தும் விளையாடி வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் நேராத வகையில் பொதுமக்கள் அங்கு செல்லாதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story