புலியை கண்காணிக்கும் பணி தொடரும்


புலியை கண்காணிக்கும் பணி தொடரும்
x
தினத்தந்தி 29 July 2023 6:45 PM GMT (Updated: 29 July 2023 6:45 PM GMT)

சிற்றார் பகுதியில் புலியை கண்காணிக்கும் பணி தொடரும்

கன்னியாகுமரி

குலசேகரம்,

சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பில் அட்டகாசம் செய்யும் புலியைப் பிடிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட எலைட் படையினர் தற்காலிகமாக பணியை நிறுத்தி விட்டு முகாம்களுக்கு திரும்பினர். இந்த நிலையில் புலி தொடர்பான அச்சத்தை போக்கும் வகையில் சிற்றாறு குடியிருப்பு பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பில் புலி நடமாட்டம் உள்ளது என்று தகவல் வந்தவுடன் வனத்துறை உஷார் அடைந்து புலியை பிடிக்கும் பணிகளை தொடங்கியது. அதே வேளையில் கண்காணிப்பு கேமரா வழியாகவோ அல்லது கூண்டுகள் வழியாகவோ புலியின் அடையாளங்கள் கிடைக்கவில்லை. இதனால் புலியை பிடிக்க வரவழைக்கப்பட்ட டாக்டர் குழு மற்றும் எலைட் படைகள் தற்போது தங்களது முகாம்களுக்கு திருப்பி விட்டனர். ஆனால், களியல் வனச்சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இங்கு தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து கொண்டிருப்பார்கள். கூண்டுகளை மாற்றப்போவதில்லை. அதே வேளையில் குடியிருப்பு மக்கள் தங்கள் ஆடுகள் மற்றும் பசுமாடுகளை பொதுவெளியில் மேய விடாமல் இரவு கொட்டகைகளில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் குடியிருப்பு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர், கடையல் பேரூராட்சித் தலைவர் ஜூலியட் சேகர், முன்னாள் தலைவர் எஸ்.ஆர். சேகர், வார்டு கவுன்சிலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், குடியிருப்பு மக்கள் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story