திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.2.93 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.2.93 கோடி
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 5:13 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.2.93 கோடி கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த 22-ந் தேதி உப கோவில்களான சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதேபோல் நேற்று முன்தினம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள், ஆவணித்திருவிழா தற்காலிக உண்டியல், மேலக்கோபுரம் திருப்பணி உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல், யானை பராமரிப்பு உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.

சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 வருவாய் கிடைத்தது. மேலும் தங்கம் 2 கிலோ 100 கிராமும், வெள்ளி 19 கிலோவும், 424 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

முன்னதாக உண்டியல் எண்ணும் பணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரா.அருள்முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையாளர் கார்த்திக், அறங்காவலர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story