திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணி திருவிழா தேரோட்டம்


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணி திருவிழா தேரோட்டம்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பகலில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். பின்னர் நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் மீண்டும் காமராஜர் சாலை, உள்மாட வீதி வழியாக மேலக்கோவில் சேர்ந்தனர்.

இரவு சன்னதி தெருவில் உள்ள பூச்சிக்காடு அருணாசலத்தேவர் வகையறா மண்டபத்தில் இருந்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது. தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.

இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story